காஷ்மீர் மசூதிக்கு வெளியே போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜாபியா மசூதிக்கு வெளியே போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித் என்பவர் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது 200 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. கூட்டத்தில் இருந்து தப்பிக்க டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். என்றாலும் கும்பல் தொடர்ந்து தாக்கியது. டி.எஸ்.பி. சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இறந்த டி.எஸ்.பி. சாதாரண உடையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மசூதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில்தான் அவரது வீடு உள்ளது. அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. செல்போனில் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட பிறகுதான் அடையாளம் தெரிந்தது.
ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி. கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் அடையாளம் தெரிய வந்தது. இன்று காலையில் கொலையுண்ட டி.எஸ்.பி.யின் இறுதிச் சடங்கு நடந்தது. இதில் சக போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட போது கண்ணீர் விட்டு அழுதனர்.