செய்திகள்

போதை மருந்து கொடுத்து 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கற்பழிப்பு: வாலிபர் கைது

Published On 2017-06-21 05:06 GMT   |   Update On 2017-06-21 05:06 GMT
திருவனந்தபுரத்தில் போதை மருந்து கொடுத்து 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கற்பழித்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் சில கல்லூரி, பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் மாணவ, மாணவிகளை குறிவைத்து அவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வதாகவும் ஏராளமான புகார்கள் சென்றன.

இதை தொடர்ந்து போலீசார் மாறுவேடத்தில் இந்த போதை கும்பலை கைது செய்ய ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே போலீசார் ரகசியமாக கண்காணித்த போது கஞ்சா கும்பலை சேர்ந்த சுஜித் (வயது 20) என்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.

அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கஞ்சா கும்பலிடம் இருந்து கஞ்சாவை வாங்கி சுஜித் பள்ளி மாணவிகளுக்கு ரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவிகளை தனது வலையில் வீழ்த்தி அவர் கற்பழித்து உள்ளார். அவரது வலையில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணைக்கு பிறகு சுஜித்தை திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் சுஜித்துக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பலை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Tags:    

Similar News