வாலிபரை சுட்டுக் கொன்ற வழக்கு: மணிப்பூர் முதல்-மந்திரி மகனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. அங்கு பிரென்சிங் முதல்-மந்திரியாக உள்ளார்.
இவரது மகன் அஜய் மீத்தாய். 2011-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி இவர் காரில் வேகமாக சென்றார். அப்போது மற்றொரு கார் அவரை முந்தி சென்றது.
வேகமாக காரை ஓட்டுவது தொடர்பாக இளைஞருக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அஜய் மீத்தாய். இளைஞரான ஐரோம்ரோஜரை சுட்டுக் கொன்றார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பான வழக்கு இம்பால் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட வாலிபரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் வாலிபரை சுட்டுக் கொன்ற வழக்கில் மணிப்பூர் முதல்-மந்திரி மகனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து இம்பால் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.
இது முதல்-மந்திரிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.