செய்திகள்

தாவூத் இப்ராகிம் உறவினர் திருமணத்தில் பங்கேற்ற பா.ஜ.க மந்திரி - கேள்வியெழுப்பும் காங்கிரஸ்

Published On 2017-05-26 01:07 GMT   |   Update On 2017-05-26 01:07 GMT
மராட்டியத்தில் நடைபெற்ற பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிம் உறவினர் திருமணத்தில் பா.ஜ.க மந்திரி, எம்.எல்.ஏக்கள் மற்றும் அம்மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மும்பை:

மராட்டியத்தில் நடைபெற்ற பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிம் உறவினர் திருமணத்தில் பா.ஜ.க மந்திரி, எம்.எல்.ஏக்கள் மற்றும் அம்மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உறவினர் ஒருவரின் மகளுக்கும், மும்பை மாநகராட்சி முன்னாள் உறுப்பினரது மகனுக்கும் நாசிக் நகரில் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மராட்டிய மாநில பா.ஜ.க மந்திரி கிரீஷ் மகாஜன் பா.ஜ.க எம்எல்ஏக்கள் மற்றும் அம்மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் எனவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் ,”தாவூத்துக்கு நெருக்கமானவர்கள்தான் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். எவரெவர் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் உள்ளனர் என்று இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதனிடையே, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மராட்டிய மாநில காவல் துறை தலைமை இயக்குநர் சதீஷ் மாத்தூர், "திருமணத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான விவரங்களையும், அறிக்கையையும் நாசிக் போலீஸாரிடம் கேட்டுள்ளோம்,அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News