செய்திகள்

சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

Published On 2017-05-22 10:24 GMT   |   Update On 2017-05-22 10:24 GMT
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட சின்னத்தை திரும்ப பெற சசிகலா அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் போட்டி போட்டு ஆவணங்களை சமர்பித்து வரும் நிலையில், டெல்லியில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி பேரம் பேசப்பட்ட தகவல் வெளியானது.



அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரத்தை பேசியதாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 25-ந்தேதி டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார்.



டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) நடந்தது. அப்போது தினகரன் சார்பில் ஆஜரான வக்கீல் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினார்.

இதேபோல் இடைத்தரகர் சுகேசும் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன், அவரது மனுவையும் நிராகரித்தது.
Tags:    

Similar News