செய்திகள்

இரட்டை இலைக்கு லஞ்சம்: மேலும் ஒரு ஹவாலா ஏஜெண்டு கைது

Published On 2017-05-18 07:58 GMT   |   Update On 2017-05-18 07:58 GMT
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மேலும் ஒரு ஹவாலா ஏஜெண்டு கைது செய்யப் பட்டுள்ளார். பாபுபாய் என்ற அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
புதுடெல்லி:

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இது தொடர்பாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். தினகரனின் நீதிமன்ற காவல் வருகிற 29-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூன், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மேலும் ஒரு ஹவாலா ஏஜெண்டு கைது செய்யப் பட்டுள்ளார். பாபுபாய் என்ற அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

டெல்லி நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது அரசு வக்கீல் இதை தெரிவித்தார்.

இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜூன் ஆகியோர் ஜாமீன் கேட்டு டெல்லி தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனு டெல்லி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
Tags:    

Similar News