செய்திகள்

கேரளாவில் 14 வயதிலேயே தாயான பள்ளி மாணவி

Published On 2017-04-29 12:15 GMT   |   Update On 2017-04-29 12:15 GMT
கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு சம்பவமாக 14 வயதிலேயே பள்ளி மாணவி ஒருவர் தாயான சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கற்பழிக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளது.

மேலும் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் ஒன்றும் அறியாத சிறுமிகள் குழந்தை பெறும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள மலையின் கீழ் பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி சிறுமி குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.

ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் அவரது தாய் கூலி வேலை செய்து மகளை அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளார். அந்த சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த மாணவிக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது தாய் மகளை அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த மாணவியை பரிசோதித்த நர்சுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

காரணம் அந்த மாணவி நிறைமாத கர்ப்பமாக இருந்தார். உடனே அவர் இதுபற்றி டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். அந்த மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

அந்த மாணவிக்கு சிறிது நேரத்தில் ஆண் குழந்தையும் பிறந்தது. சிறு வயதில் பிரசவம் நடந்ததால் தாயும், குழந்தையும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் இதுபற்றி மலையின் கீழ் போலீசுக்கும் டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமியின் தாய் தனது மகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மருந்துக் கடையில் மருந்து வாங்கி கொடுத்துவந்ததாகவும் வயிற்று வலி அதிகமானதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததாகவும் கூறினார். மேலும் தனது மகளை இந்த கதிக்கு ஆளாக்கியது யார் என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் கூறி உள்ளார்.

மயக்க நிலையில் உள்ள அந்த சிறுமி சகஜநிலைக்கு திரும்பிய பிறகுதான் அவரை கர்ப்பிணியாக்கியது யார்? என்பது தெரியவரும்.

கேரளாவில் ஏற்கனவே ஒரு 14 வயது பள்ளி மாணவி குழந்தை பெற்ற சம்பவம் நடந்துள்ளது. மேலும் பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட ஒரு பள்ளி சிறுமியும் குழந்தை பெற்றார். இது தொடர்பாக பாதிரியார் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News