செய்திகள்

பாதுகாப்பு படை வீரரின் 7 வயது மகன் கழுத்து அறுத்துக் கொலை: கிணற்றில் சடலம் மீட்பு

Published On 2017-03-30 11:08 GMT   |   Update On 2017-03-30 11:08 GMT
பாதுகாப்பு படை வீரரின் 7 வயது மகனை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டம் நந்தன்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.பி.யாதவ். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக யாதவ் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவரது 7 வயது மகன் அக்‌ஷய்குமாரை கடத்தி சென்ற சிலர், அவனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொலை செய்தனர்.

உறக்கத்திலிருந்த அக்‌ஷயைக் காணாத உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து அக்‌ஷயைத் தேடிய உறவினர்கள் அருகிலிருந்த கிணத்திலிருந்து அவனை பிணமாகக் கண்டெடுத்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஆதித்ய குமார் கூறுகையில் “என்ன காரணத்திற்காக அக்‌ஷயைக் கடத்தி சென்றனர் என்பது தெரியவில்லை. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News