செய்திகள்

ஜெயலலிதாவின் மறைவுக்கு வட நாட்டில் மணல் சிற்பத்தால் அஞ்சலி

Published On 2016-12-07 06:38 GMT   |   Update On 2016-12-07 07:46 GMT
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூரி கடற்கரையில் தனது மணல் ஓவியத்தால் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தினார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் நேற்று தனது மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்தினார்.

‘இரும்பு மங்கைக்கு இறுதி அஞ்சலி, அம்மாவின் ஆன்மா சாந்தி அடைவதாக’, என்ற வாசகத்துடன் இவர் உருவாக்கிய இந்த மணல் ஓவியத்தை பூரி கடற்கரைக்கு வரும் மக்கள் கண்டு ரசிக்கின்றனர்.



முன்னதாக, கடந்த 2012-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் சுதர்சன் பட்நாயக்கின் திறமையை பாராட்டி விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News