செய்திகள்

டெல்லியில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை - ஜனவரி முதல் அமல்

Published On 2016-12-02 21:18 GMT   |   Update On 2016-12-02 21:19 GMT
தலைநகர் புதுடெல்லியில் வெளியேற்றக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி:

நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் மாசு அதிகரித்து உள்ளது. விடிந்து பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

குறிப்பாக குழந்தைகளும், வயதானோரும் மூச்சு விட சிரமப்படுகின்றனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். இதனால் பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மக்கள் சுவாச கவசம் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் காற்றில் மாசு அதிகரித்து வருவது, டெல்லி நகர மக்களை வெகுவாக கவலை கொள்ளச் செய்து இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு விதமான உத்தரவுகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் புதுடெல்லி மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் வெளியேற்றக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு தேவையான இதர நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொள்கிறது.

தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வதண்டெர் குமார் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் நீதிமன்றி உத்தரவின் படி ஒக்லா ஆலை செயல்பட தொடரும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Similar News