புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை கல்லூரியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
- தமிழகத்தில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021, ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
- 2022 - 23-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் எழிலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-தமிழகத்தில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021, ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தாா். இதன்படி, தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலைக் கல்லூரியும், திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கலைக் கல்லூரியும் தொடங்கவும், இதில் இளநிலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல், கணிதம் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, 2022 - 23 -ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப ங்களை இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். திருக்காட்டுப்பள்ளியில் தொடங்க உள்ள புதிய அரசு கலைக் கல்லூரி தற்காலிகமாக பூதலூா் ஊராட்சி ஒன்றிய பழைய அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிா் கலைக் கல்லூரி தற்காலிகமாக ஜாமியா அரசு உதவிபெறும் பள்ளியில் தொடங்கப்பட உள்ளது.
எனவே, அந்தந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இது தொடா்பான மேலும் தகவல்களைப் பெற திருக்காட்டுப்பள்ளி அரசுக் கல்லூரிக்கு தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியின்உதவி மைய த்தையும், கூத்தாநல்லூா் அரசுக் கல்லூரிக்கு திருவாரூா் திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரியின் உதவி மையத்தையும் நேரில் அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.