search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Registration"

    • வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
    • குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தில் அதிக வெயிலின் தாக்கத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை உள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டில் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்று புழுக்கத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கரும்பு பால், குளிர்பானங்கள், இளநீர், மோர் போன்றவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் இந்த வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க ஈரோடு வனப்பகுதிகளான அந்தியூர் பர்கூர் வனப்பகுதி, கடம்பூர் வனப்பகுதிகளில் கடும் வெயிலால் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு உள்ளதால் குடிநீருக்காகவும், உணவுகளை தேடியும் யானைகள், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பகுதியில் தற்போது மண் பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

    • நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    • வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும்.
    • சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக தெரிய வருகின்றது.

    வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, என பல்வேறு காரணங்களால் தொழில் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

    இந்த கால கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும். தமிழக முதலமைச்சர் இவற்றை கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென வணிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சொந்த வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆவணப் பதிவு தொடர்பான சமீபத்திய அறிவுரை குறித்த கூடுதல் விளக்கத்துடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர் முதலில் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம்.

    இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருபவர்களின் பெயர்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வரும்போது மேற்படி நிலத்தின் பிரிபடாத பாக மனைக்கான விக்கிரைய ஆவணம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்த ஆவணம் தனியாகவும் பதிவு செய்யப்படுகிறது.

    பிரிபடாத பாக மனையின் விக்கிரைய ஆவணத்திற்கு தற்போது நடைமுறையிலுள்ள அட்டவணைப்படி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோருக்கும் கட்டுமான நிறுவனத்தார்க்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுமான ஒப்பந்த ஆவணத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 1% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவுக்கட்டணம் மட்டும் 10.07.2023 முதல் 2% உயர்த்தப்பட்டு கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 3% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையானது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்பாக பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    இது போன்ற ஆவணங்கள் பதிவுக்கு வருகையில் அடுக்குமாடி குடியிருப்பை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும் என சார்பதிவாளர்கள் வலியுறுத்தத் தேவையில்லை என்ற அறிவுரை கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த அறிவுரையை சிலர் தவறாக பயன்படுத்தத் தொடங்கினர்.

    அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானம் முழுவதுமாக முடிக்கப்பட்டு வழங்கப்படும் நிகழ்வுகளில்கூட அடுக்குமாடி குடியிருப்பை நேரடியாக பயனாளர்களுக்கு விற்பனைக் கிரையம் எழுதிக் கொடுத்து ஆவணப் பதிவு செய்வதற்கு பதிலாக கட்டுமானம் முடிந்த பின்னரும்கூட அதனை ஆவணத்தில் தெரிவிக்காமல் கட்டுமான ஒப்பந்த பத்திரம் மற்றும் பிரிபடாத பாக மனை விக்கிரைய பத்திரம் என்று மட்டுமே எழுதி பதிவு செய்யும் பழக்கம் 2020க்குப் பின்னர் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வந்தது.

    முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான ஆவணங்கள் 7% முத்திரைத் தீர்வை மற்றும் 2% பதிவுக்கட்டணத்தில் அரசுக்கு சேர வேண்டிய கூடுதலான 5% கட்டணம் செலுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக கிரைய பத்திரமாக பதிவு செய்யப்படாமல் 2020 அறிவுரைக்குப் பின்னர் 1% முத்திரைத் தீர்வை மற்றும் 3% பதிவுக்கட்டணம் மட்டுமே செலுத்தி கட்டுமான உடன்படிக்கை ஆவணமாக பதிவு செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

    ஆவணம் பதிவு செய்யும்போது கட்டடம் இருப்பதை ஆவணத்தில் குறிப்பிட வலியுறுத்த வேண்டாம் என கடந்த 2020ஆம் ஆண்டு சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததால் இது போன்ற நேர்வுகளில் சார்பதிவாளர்கள் கட்டடம் குறித்து கேள்வி எழுப்ப இயலாத நிலை இருந்து வந்தது.

    இவ்வாறு முழுமையாக முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து கிரையமாக வாங்காமல் கட்டுமான ஒப்பந்தம் மட்டுமே பதிவு செய்யும் நிலை தொடர்ந்ததால் அந்த குடியிருப்பை எதிர்காலத்தில் மறுகிரையம் செய்யும்போது பிரச்சனை எழலாம்.

    இதனைக் கருத்தில் கொண்டே ஆவணங்கள் பதிவின்போது கட்டடத்தின் கட்டுமானம் நிறைவுற்ற சான்றை வலியுறுத்த வேண்டாம் என ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரை மட்டுமே தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதே தவிர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பிரிபடாத பாக மனை மற்றும் குடியிருப்பு இரண்டையுமே கிரையமாக பெற்றுக் கொள்வது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாத நிலையில் கட்டுமான ஒப்பந்தம் செய்துகொண்டு குடியிருப்புகளை வாங்க உத்தேசிப்பவர்களுக்கு மட்டும் ஏற்கெனவே உள்ள அதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்களைப் பொருத்தமட்டில் கட்டுமான கிரைய ஆவணமாகவே அதன் தன்மையைப் பாவித்து பதிவு செய்ய வேண்டும் என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டண உயர்வு என்று தவறாக செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது.
    • பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்பாசிட்டர் கார் (வாகன எண்.TN64G0159)பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் தங்களது ஆதார், ரேஷன், பேன் கார்டு நகலுடன் காப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி நாளை (28-ந்தேதி) மாலை 6 மணிக்குள் பெயரை பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    வாகனம் ஏலம் எடுக்கவில்லையெனில் காப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு கோரும் நபருக்கு வாகனம் விற்பனை செய்யப்படும். மேலும் உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகையினை அரசு நிர்ணயம் செய்துள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம், மதுரை மண்டல ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிடம், டி.என்.ஏ.யு. நகர், ராஜகம்பீரம், ஒத்தக்கடை, திருமோகூர் சாலை, மதுரை என்ற முகவரியிலோ அல்லது 0452 2422517 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    • மகளிர் உரிமை தொகை பெற சேலத்தில் சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு நடந்தது.
    • ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.

    சேலம்:

    சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்ப டும் என வாக்குறுதி அமைக் கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்

    தொடங்கப்படும்என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார்.

    விண்ணப்பம்

    இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப் பம் மற்றும் டோக்கன் விநியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விண் ணப்ப பதிவு முகாம் தொடங்கி யது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆயிரம் முகாம்

    இதை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் உள்ள 11 லட்சம் கார்டுகளில் 500 கார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தொடங்கியது. இதையொட்டி, டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தின் படி பொதுமக்கள் முகாம்களில் குவிந்தனர்.

    அவர்களிடம் முதலில் ஆதார் எண் பதியப்பட்டது. பின்னர் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு சரியாக அமை யாத வர்களுக்கு ஆதார் அட்டை யுடன் இணைக்கப் பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு ெசய்யப்பட்டது. பின்னர் விண்ணப்பங்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டது.

    இந்த பணியில் வட்ட வழங்கல் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட் டுள்ளனர். இந்த முகாம் நடைபெறும் சில இடங்க ளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தகுதி உள்ள அனை வருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
    • சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாமல்லபுரத்தில் சுற்றுலா சார்ந்த தொழில்களான தங்குமிடம், உணவு, பயணம், சாகச பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, உள்ளிட்ட தொழில்களை தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் செய்து வருகிறது.

    இவை முறையாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் அனுமதி பெறாமல், உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பதிவு பெற்று அந்த அனுமதியுடன், செயல்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது. தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

    அதன்படி முறையாக சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் வரும் ஜூலை.31-ந் தேதிக்குள் சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • டேங்கர் வாகனங்களை முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என உரிமையாளர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
    • சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் கழிவு நீர் அகற்றும் டேங்கர் வாகனங்களும் மற்றும் தண்ணீர் டேங்கர் வாக னங்களும் மோட்டார் வாகன சட்டம் 1989, பிரிவு 39ன்படி பதிவு செய்து இயக்கப்பட வேண்டும்.

    மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி கழிவு நீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் முறைப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

    இதன்படி மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்று இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் முதல் முறை ரூ.25 ஆயிரம் அபராதமும், தொடர்ந்து அனுமதி பெறாமல் இயக்கப்பட்டால் 2-வது முறை ரூ.50 ஆயிரம் அபராதமும் அதனையும் மீறி தொடர்ந்து இயக்கினால் வாகனம் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர் வாக னங்கள் விதிமீறி இயக்கப் பட்டால் போக்குவரத்துத் துறை, காவல்துறை, நகர்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மூலம் சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகன உரிமையாளர்கள், தண்ணீர் டேங்கர் வாகன உரிமையாளர்கள் வாகனத்தினை முறையாக பதிவு செய்து முறையாக அனுமதி பெற்று இயக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.
    • அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் :

    அலகுமலையில் ஜல்லிக்க ட்டு போட்டி வருகிற 23-ந் தேதி நடைபெறுவதாகவும், நாளை மறுநாள் முதல் முன்புதிவு தொடங்குவ தாகவும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை காளைகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. அலகுமலை ஜல்லிக்கட்டில் வழக்கமாக 600க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் அலகுமலை மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜல்லிக்கட்டு வாடிவாசல், கேலரி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் குறித்து அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிந்து வந்ததால், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு, போட்டியை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 23-ந் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் பாதுகாப்பு சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டியை அலகுமலையில் நடத்தக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    இதனால் ஆலோசனை க்கு பின்னர் இடம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி அலகுமலையில் வருகிற 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்களின் முன்பதிவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் தொடங்குகிறது. எனவே மாடுபிடி வீரர்கள் தங்களுடைய ஆதார் கார்டு நகலுடன் வந்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
    • பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் நிலத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும், வழிகாட்டி மதிப்பு மிகவும் குறைவு. பெருநகரங்களை யொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் வழிகாட்டி மதிப்பை விட சந்தை மதிப்பு 10 மடங்கு அதிகம். இதன் காரணமாக பத்திரப்பதிவு களில் கருப்புப் பணம் பெருமளவு கை மாறுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒரு சதவீதமாக இருந்த பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்குமான இடைவெளி மேலும் அதிகரித்தது.

    கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அப்போது பல ஆயிரம் கோடி கருப்பு பணம் வைத்திருந்த பலரும் அந்த பணத்தை வைத்து தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களை பேசி முடித்து ஒப்பந்தம் போட்டிருந்தனர். அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்காகவும், அரசின் வளர்ச்சி பணிகளுக்காக, நில ஆர்ஜிதத்துக்குத் தரப்படும் இழப்பீடை குறைக்கவும், வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    கடந்த 20ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியும், பதிவுக்கட்ட ணத்தை நான்கில் இருந்து 2 சதவீதமாக குறைத்தும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு எல்லா தரப்பிலும் கடும் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

    கருப்பு பணப்புழக்கத்தை குறைத்து அரசின் வருவாயை அதிகரிக்க, தற்போதுள்ள சந்தை மதிப்புக்கேற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது அவசியம். இப்போதும் கடந்த 2017ல் குறைத்த 33 சதவீதம் வழிகாட்டி மதிப்புதான் மீண்டும் உயர்த்தப்படுகிறது. அதேநேரத்தில் அப்போது ஒன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்ட பதிவுக்கட்டணம் இப்போது 2 சதவீதமாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மக்களின் சுமையை குறைத்திருப்பதை போல் இருந்தாலும் உண்மையில் பத்திரப்பதி வுக்கு முன்பை விட கூடுதல் தொகையையே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    உதாரணமாக தற்போது 666 ரூபாயாக உள்ள ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு, இனி ஆயிரம் ரூபாயாக உயரும். ஒரு சென்ட் நிலத்துக்கு இதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் சேர்த்து பதிவு செலவை கணக்கி ட்டால் ரூ.7,092 அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். இனிமேல் அரசு அமைத்துள்ள குழு ஆய்வு செய்து நிலத்திற்கு புதிய வழிகாட்டி மதிப்பை பரிந்துரை செய்தாலும் பதிவு கட்டணம் இதே 2 சதவீதமாகவே தொடர வாய்ப்புள்ளது. முன்பு குறைத்த வழிகாட்டி மதிப்பை கூட்டிய தமிழக அரசு, முந்தைய அரசு மூன்று சதவீதம் கூட்டிய பதிவுக்கட்ட ணத்தை மீண்டும் ஒரு சதவீதமாகக் குறைப்பது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 100 நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.
    • வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீசா ரால் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு போலீஸ் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக, அந்தந்த போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.

    இந்த வருடாந்திர ஆய்வில் சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு காவல் ஆளினர்களின் கவாத்து, உடை பொருட்களை தணிக்கை செய்தார். பின்னர் 24 இருசக்கர வாகனங்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த வாக னங்களை பார்வையிட்டு அவை சரியாக பராமரிக்கப்ப டுகிறதா? என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா? எனவும், வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, தஞ்சை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சை மாவட்டத்தில் பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தவும் தோட்டக்கலை துறை மூலம் பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23-ம் ஆண்டில் சிறப்பு திட்டமாக அறிமுகப்படு த்தப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    ஆர்வமுள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in./tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலர்களை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×