மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு
- மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
- பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
திருச்சி :
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்கள் வட மாவட்டங்களில் இருந்து பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கின்றது. இந்த பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதிகள் சுத்தமாக இல்லை என பொதுமக்கள் தரப்பில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் 4- வது மண்டல உதவி ஆணையர் சண்முகம் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீரென்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள கழிப்பிடங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் பல மாவட்டங்களிலிருந்து திருச்சிக்கு வருகை தந்த பேருந்து பயணிகளிடம் கழிப்பிட வசதி குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது; மாநகராட்சி தரப்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்று திட்டம் ஒன்றை தொடங்கி மாநகர பகுதிகளில் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் சுகாதாரமான முறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்தல் என்று பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதில் முதல் கட்டமாக மடத்தில் உள்ள கழிப்பிடங்கள் தூய்மையான முறையில் பராமரிப்பது சுத்தமாக வைத்துக் கொள்வதற்காகவும் ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வாறு அந்த கழிப்பிடங்கள் தற்போது அமைந்துள்ளது.
ஆகவே வெளியூர்களில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் இனி முகம் சுளிக்காமல் பேருந்து நிலைய கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.