உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான வாகனங்கள்.

விடுமுறை நாள் என்பதால் பல்லடம் விபத்தில் உயிர் தப்பிய பொதுமக்கள்

Published On 2022-09-19 06:08 GMT   |   Update On 2022-09-19 06:08 GMT
  • ஆம்னி வேனை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.
  • பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் :

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ்(வயது 49) ,ராஜம்மாள் (47) தம்பதியினர்.இவர்களது மகன் கிட்சன் ஞானதுரை(27) .ஞானதுரைக்கு பெண் பார்க்க தனது உறவினர்களான செல்வி, ஆசீர் கோவில் பிள்ளை, அகஸ்டின் ஆகிய 6 பேருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்துக்கு வந்துள்ளனர். பெண் பார்த்து விட்டு கோவைக்கு திரும்பிய போது பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரே தாங்கள் வந்த ஆம்னி வேனை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது பல்லடத்தில் இருந்து செஞ்சேரிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று‌ டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோடு ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பின்னர் ஆம்னி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் வந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜம்மாள், செல்வராஜ், அகஸ்டின் உட்பட 5 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த நான்கு பேருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் உடுமலையைசேர்ந்த பட்டீஸ்வரன் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் சரணடைந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் பல்லடம் தாலுக்கா அலுவலகத்திற்கு, அருகே என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு புகார்கள் தொடர்பாக தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். விபத்து நடந்த இடத்தில் ஜெராக்ஸ் மற்றும் பேக்கரி உள்ளது. எப்பொழுதும் அங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டு இருப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகள் விடுமுறை விடப்பட்டு அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News