உள்ளூர் செய்திகள்

சுவாமி ஜெயந்தி நாதர் தங்க தேரில் கிரி வீதி உலா வந்த போது எடுத்த படம்.

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா-சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்க தேரில் சுவாமி கிரி வீதி உலா

Published On 2023-11-15 08:52 GMT   |   Update On 2023-11-15 08:52 GMT
  • 3-வது நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
  • கந்தசஷ்டி திருவிழா 6-ம் நாள்18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தங்கத்தேர்

3-வது நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

கந்த சஷ்டி திருவிழா ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜையும், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் எழுந்தருளி அங்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகமாகி அலங்கார தீபாராதனைக்கு பிறகு தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி திருவிழா 6-ம் நாள்18-ந்தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூபம் தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையும், பகல்12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனையும், பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

திருக்கல்யாணம்

கந்த சஷ்டி திருவிழா 7-ம்நாள் 19-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.அன்று காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

விழாவில் கலந்து கொள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் நீராடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News