உள்ளூர் செய்திகள்

மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழகத்தில் ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை - தஞ்சையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published On 2022-07-10 10:07 GMT   |   Update On 2022-07-10 10:07 GMT
  • தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.
  • உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சையில் இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் இன்று 3471 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 93.10 சதவீதமும், 2-ம் தவணை தடுப்பூசி 87.10 சதவீதமும் போடப்பட்டுள்ளது. 12-14 வயது மற்றும் 15-17 வயது உடையவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி தன்னிறைவு பெற்ற மாவட்டமாக விளங்குகிறது.

தற்போது மாவட்டத்தில் 143 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதி 5 சதவீதம் பேர் தான் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் தற்போது 21513 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி பயன்பாட்டால் உயிர் இழப்பு இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 144 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விரைவில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே கடும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை வருவதால் ஊரடங்கு போட வாய்ப்பு இல்லை.

சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4308 காலி பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காலரா பாதிப்பு இருந்தது தெரிய வந்தவுடன் அதனை ஒட்டி உள்ள திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக காலரா பாதிப்பு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,

எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News