ஓ.பன்னீர்செல்வம் அணியின் சமரச திட்டத்தை நிராகரித்த எடப்பாடி அணி
- பதவி வெறி அவர்களின் அறிவை மயக்கிவிட்டது.
- சட்டத்தை மறந்து, நீதிபதிகளின் உத்தரவை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரிக்க உரிமை இல்லை. அதேபோல் அவர்கள் தேர்வு செய்த அவைத்தலைவர் தேர்வும் செல்லாது. தீர்மானங்கள் ரத்து ஆகும் போது பொதுக்குழு உறுப்பினர்களே ரத்து ஆகி விட்டதாகத்தானே அர்த்தம்.
அப்படி இருக்கும் போது அவைத்தலைவரை எப்படி தேர்வு செய்ய முடியும். பதவி வெறி அவர்களின் அறிவை மயக்கிவிட்டது. சட்டத்தை மறந்து, நீதிபதிகளின் உத்தரவை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சம்.
பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத்தலைவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. நேற்று நடந்தது பொதுக்குழு கூட்டமே அல்ல.
ஓ.பன்னீர்செல்வம் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார். அவரை பொறுத்தவரை இரட்டை தலைமை தான் கட்சிக்கு நல்லது. எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்றார்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நிராகரித்துவிட்டார்கள். கட்சி இருக்கும் நிலையில் ஒற்றை தலைமை தான் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது. சிறப்பாக செயல்பட முடியும்.
ஒற்றை தலைமை என்ற திட்டத்தை எக்காரணத்தை கொண்டும் கைவிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.