காமன்வெல்த் போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள்: இந்திய வீரர்களுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு
- மல்யுத்தப் போட்டிகளில் அன்ஷு மாலிக் வெள்ளி, திவ்யா காக்ரன், மோகித் கிரேவால் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
- மல்யுத்தத்தில் மட்டும் ஒரே நாளில் இந்தியர்கள் 6 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மல்யுத்த ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்ஷி மாலிக் ஆகிய மூவரும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஒரே நாளில், ஒரே ஆட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்கு வென்று கொடுத்த மூவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
மல்யுத்தப் போட்டிகளில் அன்ஷு மாலிக் வெள்ளி, திவ்யா காக்ரன், மோகித் கிரேவால் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர். மல்யுத்தத்தில் மட்டும் ஒரே நாளில் இந்தியர்கள் 6 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்.
ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தடகளம், ஆக்கி, பாட்மிண்டன் போட்டிகளிலும் இந்தியா வெற்றிகளைக் குவித்து பதக்கப்பட்டியலில் மேலும் முன்னேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.