உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் கொள்ளையடித்து காருடன் தப்பிய கொள்ளையர்

Published On 2023-01-31 09:40 GMT   |   Update On 2023-01-31 09:40 GMT
  • ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.
  • சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கோவை

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார்.

அப்போது சாமிநாதன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் மேஜையில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

வீடு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாமிநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

Tags:    

Similar News