- கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்தது.
- மதுரை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது.
மதுரை
தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வருகிறது. மதுரையில் நேற்று மட்டும் 17 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று பாதிப்புடன் உள்ள 154 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இங்கு 1600 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இரவு 7 மணி வரை சிறப்பு முகாம் நடக்கும். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
மதுரை மாவட்டத்தை பொருத்தவரை முதல் டோஸ்- 87 சதவீதம், 2-வது டோஸ்- 75 சதவீதம் போடப்பட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ் 3 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன" என தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஒரு சில பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக வந்திருந்து, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.