- கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 4 பேர் கும்பல் குருநாதனை கத்தி முனையில் மிரட்டி ரூ.4 ஆயிரத்து 650ஐ பறித்துச் சென்றது.
மதுரை
மதுரை தத்தனேரி புது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). கூலித் தொழிலாளி. வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் கண்மாய்க்கரை பகுதிக்கு சென்றார். அவரை 2 பேர் வழிமறித்து, ரூ.500-ஐ பறித்துச்சென்றது. இதுகுறித்து கார்த்திக் செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி கார்த்திக்கிடம் பணம் பறித்த களத்துப் பொட்டல், எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (28), பெரியபூலாம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சிறுவன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விளாங்குடி, சொக்கநாதபுரம் தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (27). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர் விளாங்குடி பாலமுருகன் கோவில் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்குமாரிடம் வழிப்பறி செய்த பிரசாத் (27) என்பவரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (48). நேற்று இவர் அவனியாபுரத்தில் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதிக்கு சென்றார். அங்கு வந்த 4 பேர் கும்பல் குருநாதனை கத்தி முனையில் மிரட்டி ரூ.4 ஆயிரத்து 650-ஐ பறித்துச் சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார்
வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.