உள்ளூர் செய்திகள்

காங்கிரசை அழிப்பதற்காக மோடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published On 2022-06-12 08:58 GMT   |   Update On 2022-06-12 08:58 GMT
  • நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ஒரு ரூபாய் கூட பண பரிவர்த்தனை நடக்கவில்லை.
  • ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜராகும் நேரத்தில் உண்மையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.

அமலாக்கத்துறை என்பது வெளிநாடுகளில் இருந்து நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க வேண்டிய அமைப்பு ஆகும்.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ஒரு ரூபாய் கூட பண பரிவர்த்தனை நடக்கவில்லை. அனைத்தும் எழுத்து பூர்வமாக செய்யப்பட்டது. ஆனால் சுப்பிரமணியசாமி திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த தவறான வழக்கை தொடர்ந்தார்.

எந்த தவறும் நடைபெறவில்லை என்று தெரிந்தும் மோடி காங்கிரசை வீழ்ச்சி அடைய செய்வதற்காக அமலாக்க துறையை ஏவி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார்.

உலக வரலாற்றில் சர்வாதிகாரிகள் தான் இப்படி விசாரிக்க செல்வார்கள். தேச துரோக குற்றச்சாட்டை சொல்வார்கள். அதன் பிறகு எதுவும் இல்லை என்று ஆகும்.

அதேபோல தான் இப்போது மோடியும் செயல்படுகிறார் எனவே தான் நாளை ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜராகும் நேரத்தில் உண்மையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த விசாரணையை அமலாக்கத்துறை நடத்தக்கூடாது. கோர்ட்டு விசாரித்து உண்மையை வெளியே சொல்ல வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

Tags:    

Similar News