உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் மாயமான இளம்பெண்

Published On 2022-09-06 10:40 GMT   |   Update On 2022-09-06 10:40 GMT
  • கணவருடன் செல்ல மறுத்ததால் பரபரப்பு
  • குலசேகரம் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே அண்ணாநகர், சானல்கரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு மனைவியும், 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

தொழிலாளியின் மனைவி மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் காலையில் பஸ்சில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.அப்போது ஆற்றூர்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த வாலிபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அதன்பிறகு தனிமையில் வசித்து வந்தார். இதனால் தொழிலாளியின் மனைவியும், வாலிபரும் நெருங்கி பழகினர். அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்தனர். இதற்காக கணவருக்கு தெரியாமல் அருகில் உள்ளவர்களிடம் இருந்து சுமார் ரூ. 8 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி கள்ள காதலனுடன் பல்வேறு இடங்களில் சுற்றி வந்தார்.

கடன்காரர்கள் இவரிடம் கடன் கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்தவுடன் கணவர் தலையிட்டு 4 லட்சம் பணத்தை கடன்காரர்களுக்கு திருப்பி கொடுத்தார்.கடந்த ஒரு வருடத்துக்கு முன் அந்த பெண் கணவர், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு கள்ள காதலனுடன் சென்றார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து கண்டுபிடித்து கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் கணவர் வேலைக்கு சென்ற பிறகு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கள்ள காதலனுடன் மாயமானார்.கணவர் வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த பார்த்த போது வீட்டில் மனைவி இரண்டு பிள்ளைகளையும் காணவில்லை உடனே அவர் குலசேகரம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தேடி வந்தனர். இவர்களின் செல்போன் நம்பரை வைத்து தேடிய போது நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் இருந்தனர். உடனே உள்ளுர் போலீசார் உதவியுடன் மீட்டு குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.

அங்கு கணவருடன் செல்ல மாட்டேன், கள்ள காதலனுடன் தான் செல்வேன் என்று அந்த பெண் அடம் பிடித்தார். போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி பிறகும் அவரது முடிவு மாறவில்லை. அதன் பிறகு குழந்தைகளின் பாச போராட்டம் நடத்தியும் பலன் அளிக்கவில்லை

அதன் பிறகு இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு அந்த பெண் கள்ள காதலுடன் காரில் ஏறி சென்றார்.

இதனால் குலசேகரம் போலீஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News