சுல்தான்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலி
- வழியில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது
- விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மலுக்குபாறையை சேர்ந்தவர் பால்துரை (வயது 42). இவரது மனைவி ஆஷா (40). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி இருவரையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பால்துரை பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆஷாவை அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.