உள்ளூர் செய்திகள்

தாராபுரம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர் மீது சரமாரி தாக்குதல்- அரசு பஸ் டிரைவர் உள்பட 7 பேர் கைது

Published On 2023-06-16 07:46 GMT   |   Update On 2023-06-16 07:46 GMT
  • பஸ் நிலையமே போராட்ட களம் போல் காட்சியளித்தது.
  • தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை மடக்கி பிடித்து அவர்களை தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று இரவு பழனியில் இருந்து பஸ்சை ஓட்டிக் கொண்டு தாராபுரம் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கினர்.

அதனை தங்களது செல்போனில் படம் பிடித்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரையும் அந்த கும்பல் தாக்கியது. தட்டிக்கேட்ட தனியார் பஸ்சில் பயணித்த 2 பெண்கள் தள்ளு முள்ளுவில் சிக்கி காயம் அடைந்தனர். பஸ் நிலையமே போராட்ட களம் போல் காட்சியளித்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை மடக்கி பிடித்து அவர்களை தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் தாராபுரம் வீராட்சிபுரத்தை சேர்ந்த குப்புசாமி மகன் செல்வராஜ் ( 44) என்பதும் , தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தனியார் பஸ் டிரைவர் பூபதிக்கும் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ்க்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை எடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பூபதியும், செல்வராஜூம் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அவர்கள் மீது தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகாரும் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் தனியார் பஸ் டிரைவர் பூபதி, ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனர்.

அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி., கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் இரவு தாராபுரம் பஸ் நிலையம் போர்க்களம் போல் காட்சியளித்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News