களக்காடு அருகே நாராயணசாமி கோவிலில் ஆனி தேரோட்டம்
- அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
- தேருக்கு முன்பாக கேரளாவின் புகழ் பெற்ற நடனமான கதகளி மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவிலில் 93-வது ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். விழாவின் 8-ம் நாளன்று பரிவேட்டை விழாவும், 9-ம் திருநாளன்று அய்யா நாராயணசுவாமி பச்சை சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான நேற்று நடந்தது.
இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் இழுத்தனர். தேருக்கு முன்பாக கேரளாவின் புகழ் பெற்ற நடனமாக கதகளி மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. குதிரைகளும் ஊர்வலமாக சென்றன. மகாவிஷ்ணு, அனுமன், நரசிம்ம அவதார மூர்த்தி வேடம் அணிந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.