உள்ளூர் செய்திகள்

 எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டவர் விபத்தில் உயிரிழப்பு- ரூ.7 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் ஈ.பி.எஸ்.

Published On 2022-07-12 21:27 GMT   |   Update On 2022-07-12 21:30 GMT
  • சாலை விபத்தில், நவக்குளம் கிளைக் கழகச் செயலாளர் செந்தில்குமார் மரணம்.
  • படுகாயமடைந்து சதீஷ்குமாரின் மருத்துவ சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் 11.07.2022 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார் மூலம் ஊர் திரும்பும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில், கரூர் மாவட்டம், கடவூர் தெற்கு ஒன்றியம், தரகம்பட்டி ஊராட்சி, நவக்குளம் கிளைக் கழகச் செயலாளர் செந்தில்குமார் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வருத்தம் அடைகிறேன்.

இந்த விபத்தில், கடவூர் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கழக உறுப்பினர் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தும்; கடவூர் தெற்கு ஒன்றியம், தரகம்பட்டி ஊராட்சி, வெங்கடேஸ்வரா நகர் கிளைக் கழகச் செயலாளர் சரவணன், மாவத்தூர் ஊராட்சி, கழுதிரிக்கப்பட்டி முத்தாலம்மன் கோயில் தெரு கிளைக் கழகச் செயலாளர் பொன்னம்பலம், கழுதிரிக்கப்பட்டி வடக்கு கிளைக் கழகச் செயலாளர் முருகேசன் ஆகியோர் லேசான காயமடைந்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும், மன வருத்தம் அடைகிறேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்த செந்தில்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்திற்கு கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில், குடும்ப நல நிதியுதவியாக 7,00,000/- ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சதீஷ்குமாரின் மருத்துவ சிகிச்சைக்காக 1 லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சரவணன், பொன்னம்பலம், முருகேசன் ஆகிய 3 பேரின் மருத்துவ சிகிச்சைக்காக தலா 25,000/- ரூபாயும், மாவட்டக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும். சிகிச்சை பெற்று வரும் கழக உடன்பிறப்புகள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News