உள்ளூர் செய்திகள்
மழை நீர் சூழ்ந்த நெற்பயிர்களை ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள்
- ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு,நாதல் படுகை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
- மழையினால் பயிரிலுள்ள குருத்துப் புழுக்கள் தானாகவே அழிந்து விடும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் சுமார் 5000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா, ஆத்மா திட்ட மேலாளர் அரவிந்த், அலுவலர்கள் சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு,நாதல் படுகை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த நேரடி விதைப்பு பயிரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா கூறுகையில் நெற்பயிரில் பரவலாக குருத்துப் புழு தாக்குதல் இருந்து வருகிறது.
இந்த மழையினால் பயிரிலுள்ள குருத்துப் புழுக்கள் தானாகவே அழிந்து விடும் என்றார்.