ஆடிபட்டம்- காய்கறி முனைப்பு இயக்கம்
- 14 பிளாக்குகளில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 பிளாக்குகளில் ஆடிபட்டம் காய்கறி முனைப்பு இயக்கம் நடைபெற்றது
- விவசாயிகளுக்கு கொடி காய்கறி விதைகள், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விதைகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆடிபட்டம் காய்கறி விதைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் வழங்க தோட்டகலைத்துறை மற்றும் மலைப்பயிர் துறைக்கு அறிவுறுத்தினார்.
அதன்பேரில் மாவட்ட தோட்டக்கலைதுறை துணை இயக்குனர் கலைச்செல்வன் வழிகாட்டுதல் படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 பிளாக்குகளில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 பிளாக்குகளில் ஆடிபட்டம் காய்கறி முனைப்பு இயக்கம் நடைபெற்றது.
இந்த 3 பகுதிகளிலும் நடந்த நிகழ்ச்சியில் அந்தந்த தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கொடி காய்கறி விதைகள், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விதைகள் வழங்கப்பட்டன. மேலும் காய்கறி சாகுபடி செய்து அதிக மகசூல் செய்வது குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மற்ற பிளாக்குகளிலும் ஆடிப்பட்டம் காய்கறி முனைப்பு இயக்கம் நடைபெற உள்ளது.