சங்கரன்கோவில் பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்ற 4 பேர் அதிரடி கைது- கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி.சுதீர் எச்சரிக்கை
- சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
- அப்துல் காதர், அமீர் அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஐ.ஜி. சைலேந்திரபாபு ஆகியோர் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாக கூடாது என்ற எண்ணத்தில் போதை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளதாக காவல்துறைக்கு தகவல்கள் வந்தது.
அதிரடி சோதனை
இந்நிலையில் மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பெயரில் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதிக போதைக்காக டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில் வாங்கி வந்து அதில் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய பொருட்களை சேர்த்து விற்றதாக சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 57), கணபதி நகரை சேர்ந்த கருப்பசாமிபாண்டியன் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 24 காலி மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் 2 பேர் கைது
இதேபோல் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பெயரில் அங்கு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்து 585 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 270 கூலிப் எனப்படும் போதை புகையிலை பொருட்களையும் கைப்பற்றினர்.சம்பவத்தில் ஈடுபட்ட காயிதே மில்லத் 1ம் தெருவை சேர்ந்த அப்துல் காதர் (49) என்பவரையும், அவரது மகன் அமீர் அலி (21) என்பவரையும் கைது செய்தனர்.
டி.எஸ்.பி. எச்சரிக்கை
சங்கரன்கோவில் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதனை கண்காணிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ள தாகவும், எனவே போதை பொருள் விற்பனை செய்வோர் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என டி.எஸ்.பி. சுதீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.