உள்ளூர் செய்திகள்
வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
தஞ்சை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் பழனிவேல். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் வெளியே வரண்டாவில் தனது மனைவி மாரியம்மாள் (வயது 40) மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது கேட்டை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்தனர்.
திடுக்கிட்டு எழுந்த மாரியம்மாள் திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தமிழ் பல்கலை கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.