உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் ஜூன் 13ந்தேதி பள்ளிகளை திறக்க வேண்டும்- நர்சரி மெட்ரிக் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்

Published On 2022-05-22 10:50 GMT   |   Update On 2022-05-22 10:50 GMT
தமிழகத்தில் ஜூன் 13ந்தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று நர்சரி மெட்ரிக் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை:

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பள்ளி கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பொதுத் தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கிறார்கள். மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில் தான் இருப்பார்கள்.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து தமிழக அரசு அறிவித்தபடி ஜூன் 13ந் தேதி பள்ளிகளை திறந்து மாணவர்கள் படிப்பை உறுதி செய்திட வேண்டும். ஏற்கனவே 800 நாட்கள் கொரோனா நோய் தொற்று காலத்தில் வீட்டில் இருந்துவிட்டு படிப்பை மறந்து கல்வி பாழாகிப் போனதால் மீண்டும் அந்த தவறை நாம் செய்யக்கூடாது.

சில ஆசிரியர் சங்கங்கள் கோடை விடுமுறை இன்னும் வேண்டும் என்று கேட்பது வேதனையாக இருக்கிறது. ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பதை மறந்து விடுமுறை விடுமுறை என்று நாள்தோறும் விடுமுறை கேட்பது எந்த வகையில் நியாயம்?.

ஏற்கனவே மாணவர்கள் அடிப்படை கல்வியை மறந்துவிட்டார்கள். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் 23ந் தேதியே தொடங்கிட வேண்டும்.

பள்ளிகள் திறப்பதை காலதாமதம் செய்ய செய்ய பெற்றோர்களின் கடன் சுமை அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் உருவாகும். மாணவர்களை வீட்டில் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது. மாணவர்கள் சும்மா இருந்தால் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

படிக்கிற சூழல் இல்லாமல் போகும். படிப்பதை மறப்பார்கள். ஏழ்மையில் உள்ள பெற்றோர்கள் கூலி வேலைக்கு பிள்ளைகளை அனுப்புவார்கள். விடுமுறை தொடர தொடர குழந்தை தொழிலாளர்கள் குழந்தை திருமணங்கள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும். சமுதாய சீர்கேடுகள் மிதமிஞ்சி போகும்.

பெற்றோர்களின் மன உளைச்சலை குறைக்க உடனடியாக பள்ளிகள் திறந்து பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து பெற்றோர்கள் கனவை நனவாக்க இந்த ஆண்டாவது நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News