உள்ளூர் செய்திகள்
3 கடைகளில் மேற்கூரையை உடைத்து கொள்ளை
சேலம் 5 ரோட்டில் அடுத்தடுத்து 3 கடைகளில் மேற்கூரையை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் மாமாங்கம் பகுதியைச் சேர்ந்தவர் லெனின் (வயது 45). இவர் சேலம் 5 ரோடு ஓமலூர் சாலையில் பைப் கடை நடத்தி வருகிறார். இவரது கடையை ஒட்டி லிங்கேஸ்வரன் என்பவரது ஜெராக்ஸ் கடை, சாதிக்பாட்சா என்பவரது பேக்கரி கடை உள்ளது.
நேற்று இரவு இவர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இன்று காலையில் வந்து பார்த்தபோது அறையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு வாலிபர் உருவம் பதிவாகி இருந்தது.
அதை வைத்து மர்ம நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பைப் கடையில் ரூ 15 ஆயிரம், ஜெராக்ஸ் கடையில் ரூ 45 ஆயிரம், பேக்கரி கடையில் ரூ.3500 கொள்ளை போனது தெரியவந்தது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.