சேலத்தில் பலத்த மழை- வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம்
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை சுப்பிரமணியம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரமணிச்சந்திரன் (வயது 49).இவர் வெல்லமண்டி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு நரசிம்மன் செட்டி தெருவில் உள்ளது. அந்த வீடு பாழடைந்த கிடக்கிறது. அந்த வீட்டில் யாரும் தற்போது வசிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இன்று காலை 7.45 மணி அளவில் அந்த வீட்டின் சிலாப் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது அந்த அந்த வீட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்த கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் (40), 3 ரோடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (75), நரசிம்மன் செட்டி தெருவைச் சார்ந்த ஹரிஹரன் ( 26)ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதுகுறித்து உடனடியாக அன்னதானபட்டி போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அன்னதானபட்டி உதவி கமிஷனர் அசோகன், தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.