உள்ளூர் செய்திகள்
வழக்கு

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி- பூங்கா பராமரிப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2022-04-26 03:49 GMT   |   Update On 2022-04-26 03:49 GMT
வடவள்ளி போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு நலசங்க தலைவர், பூங்கா பராமரிப்பாளர் மற்றும் எலக்ட்ரீசியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வடவள்ளி:

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரதீஷ்- சுகன்யா தம்பதி. இவர்களுக்கு லக்‌ஷன்(11) மகன் உள்ளார்.

பிரதீஷ் துபாயில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சுகன்யா கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து கொண்டு தனது மகனுடன் இங்கு வசித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவுக்கு மகனை விளையாடுவதற்கு சுகன்யா அழைத்து சென்றார்.

அங்கு சிறுவன், குடியிருப்பை சேர்ந்த மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பூங்காவில் அறுந்து கிடந்த மின் வயரை சிறுவன் மிதித்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சிறுவனின் சித்தப்பா மங்களேஸ்வரன் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதில் அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் மற்றும் பூங்கா பராமரிப்பாளர்கள், வயரை சரியாக பணி செய்யாத எலக்ட்ரிசீயன் தான் காரணம் என தெரிவித்திருந்தார்.

அதன்படி வடவள்ளி போலீசார், அடுக்குமாடி குடியிருப்பு நலசங்க தலைவர், பூங்கா பராமரிப்பாளர் மற்றும் எலக்ட்ரீசியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்களிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News