உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே குழந்தைகள் கண் முன்னே தாய் தூக்கிட்டு தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே குழந்தைகள் கண் முன்னே தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை அடுத்த பாய்ச்சல் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 30) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி நதியா (28). இவர்களுக்கு நிசானி, ரேணுகா தேவி, யாஷ்வினி என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பெருமாளுடைய அண்ணன் அன்பழகன் மற்றும் அண்ணி அம்பிகா அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நதியா அம்பிகாவிடம் தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபித்துக்கொண்டு அம்பிகா கடந்த 5 மாதத்திற்கு முன்பு தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று அம்பிகா தனது கணவர் வீட்டிற்கு வந்தபோது நதியா விற்கும், அம்பிகா விற்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த நதியா 3 குழந்தைகளையும் வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டினுள் இருந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதுள்ளது.
அப்போது நதியாவின் உறவினர்கள் மற்றும் அருகில் வேலை செய்து கொண்டிருந்த பெருமாள் ஆகியோர் ஓடிச்சென்று வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். நதியா மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெருமாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நதியாவின் கணவர் பெருமாள் இவரது அண்ணன் அன்பழகன் மற்றும் அம்பிகா ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று இச்சம்பவம் குறித்து இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.