உள்ளூர் செய்திகள்
மெரினா நீச்சல் குளத்தில் குவிந்த பொதுமக்கள்

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மெரினா நீச்சல் குளத்தில் குவிந்த பொதுமக்கள்

Published On 2022-04-17 08:30 GMT   |   Update On 2022-04-17 08:30 GMT
சென்னையில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் மெரினா நீச்சல் குளத்தில் அலைமோதி வருகிறது.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மிகப்பெரிய நீச்சல் குளம் உள்ளது.இந்த நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை இயங்கி வருகிறது.

கோடை காலத்தில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நீச்சல் குளத்தை பயன்படுத்தி வந்தனர்.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மெரினா நீச்சல்குளம் மூடப்பட்டது.இதனால் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் கிடந்தது.

உபயோகபடுத்த முடியாதபடி இருந்த நீச்சல்குளம் தற்போது சீரமைக்கப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து நீச்சல் குளத்தில் புதிய தண்ணீர் நிரப்பப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் மெரினா நீச்சல் குளம் பொதுமக்கள் உபயோகத்துக்காக திறக்கப்பட்டது.

இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்திற்கு பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சென்னையில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் மெரினா நீச்சல் குளத்தில் அலைமோதி வருகிறது. விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள் மெரினா நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்டனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மெரினா நீச்சல் குளம் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது. இங்கு சிறுவர்கள், இளைஞர்கள் பெருமளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

தற்போது கோடை வெயில் கொளுத்துவதையொட்டி வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக இளைஞர்கள், பொதுமக்கள் நீச்சல் குளத்துக்கு தினமும் வருகிறார்கள். அங்கு உற்சாக குளியல் போடுகிறார்கள்.

வருகிற “மே ‘மாதம் வரை கூட்டம் அதிகம் இருக்கும். இளைஞர்கள், பொதுமக்கள் இன்னும் அதிகளவு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News