உள்ளூர் செய்திகள்
போலியான ஜி.எஸ்.டி. கணக்கு காட்டி ரூ.37½ லட்சம் மோசடி- பெண் அதிகாரி கைது
போலியான ஜி.எஸ்.டி. கணக்கு காட்டி ரூ.37½ லட்சம் மோசடி செய்த பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், சாந்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் சாந்தி. இவரது மனைவி சைனி இவாஞ்சலின் (வயது 24). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கீழ் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். இவர் அலுவலக ஜி.எஸ்.டி. கணக்குகளை கையாளும் போது ரூ.37½ லட்சத்தை கையாடல் செய்துள்ளார். அதற்கு பதில் போலியான ரசீதுகள் வைத்து ஜி.எஸ்.டி.யில் கணக்கு காண்பித்துள்ளார்.
இந்த நிலையில் அலுவகத்தின் உயர் அதிகாரிகள் அலுவலக கணக்குகளை சரிபார்த்தபோது, போலியான ரசீதுகளை வைத்து பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தனியார் கம்பெனியின் மேலாளர் செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிகாரி சைனி இவாஞ்சிலினை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.