search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman officer"

    • பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மஞ்சரியாலா பெல்லம் பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்க்கம் சின்னய்யா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுகுறித்து பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.

    அப்போது துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ அடிக்கடி எனக்கு போன் செய்து நான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும். என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என பேசி வருகிறார் .

    மேலும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் எனது வீட்டிற்கு நேரில் வந்து தொல்லை கொடுத்தனர்.

    நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என புகாரில் கூறியிருந்தார்.

    மேலும் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    அவரிடம் முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது எம்.எல்..ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக போராட்டத்தை கைவிடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

    அதனை ஏற்று சேஜல் போராட்டத்தை கைவிட்டார். மீண்டும் அவர் ஐதராபாத்திற்கு வந்து பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து எம்.எல்.ஏ. அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் அதிகாரி சேஜல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று ஐதராபாத் ஜூப்ளிகில்சில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பெண் அதிகாரி சேஜல் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் பெண் அதிகாரி சேஜல் அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர் அதில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில் துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ.வின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது ஆட்கள் என்னை கொலை செய்ய பார்க்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை கொலை செய்து விடுவார்கள். அவர்களிடமிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என எழுதியுள்ளார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கி உள்ள அறையில் இருந்து ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா (வயது 57) வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    தந்தை பெரியார் பாலிடெக்னிக் வளாகத்திலேயே தங்கி உள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

    இந்த மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது பணிகளை ஆய்வு செய்வது போன்றவை இவரது பணியாகும்.

    இந்த நிலையில் மண்டல செயற்பொறியாளர் ஷோபனா லஞ்சம் வாங்குவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு முதல் ரகசியமாக கண்காணித்தனர்.

    வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஷோபனா காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார்.

    அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரது காரில் சோதனையிட்டனர். அதில் ரூ.5 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்திற்கு கணக்கு இல்லை.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கி உள்ள அறையில் சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் பணம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம்

    மேலும் அங்கிருந்த ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அலுவலகம் சம்பந்தமான 18 ஆவணங்கள் ஷோபனாவின் அறையில் இருந்தன. அவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள ஷோபனாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர்.

    அங்கு கட்டு கட்டாக ரூ.1 கோடிக்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து பணத்தை கணக்கிட்டு வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    கபாலீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாயமான சம்பவம் தொடர்பாக கைதான அறநிலையத்துறை பெண் அதிகாரிக்கு நிபந்தனைஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #KapaleeshwararTemple
    கும்பகோணம்:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் நடைபெற்றன. அப்போது புன்னை வனநாதர் சிலை, ராகு, கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாக கூறி அந்த சிலைகள் மாற்றப்பட்டன. பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய சிலைகள் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் சிலைகள் மாற்றப்பட்டதற்கு அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவோடு இரவாக 3 சிலைகளும் மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாற்றப்படும் சிலைகளை ஆகமவிதிப்படி பூஜைகள் செய்து மண்ணில் புதைத்து இருக்க வேண்டும் என்றும் ஆனால் 3 சிலைகளும் அதிகாரிகள் துணையுடன் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் கோவில் சிலைகள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. மேலும் சிலைகள் மாயமானது பற்றி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. குமார் தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு நடத்தினர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிலைகள் மாயமான சம்பவம் பற்றி 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இதையடுத்து சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கடந்த அக்டோபர் மாதம் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தனர். புன்னை வனநாதர் சிலை, ராகு-கேது சிலைகள் இருந்த இடத்திலும் ஆய்வு நடத்தினர்.

    சிலைகள் மாயமான 2004-ம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரியாக திருமகள் என்பவர் இருந்தார். அவர் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருக்கிறார். பெரம்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த அக்டோபர் மாதம் திருமகளிடம் அவரது வீட்டில் வைத்து சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

    இந்த நிலையில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கும்பகோணம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள நீதிமன்ற நடுவர் ஐயப்பன் பிள்ளை முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது இரவு நீண்ட நேரமாகி விட்டதால் நாளை (இன்று) கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும், அதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் திருமகளின் வக்கீல் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். அது தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

    முன்னதாக கைதான திருமகளை மருத்துவ பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பில் இருந்த திருமகள், இன்று காலை 10 மணியளவில் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து திருமகள் நீதிபதி அய்யப்பன்பிள்ளை முன்பு ஆஜர்படுத்தினர். பிறகு திருமகள் சார்பில் அவரது வக்கீல் குப்புசாமி, திருமகளுக்கு ஜாமீன் கேட்டு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அப்போது அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது வக்கீல் குப்புசாமி, திருமகளுக்கு 85 வயதான தாயும், 12 வயதில் மகளும் உள்ளனர். இதனால் சென்னையிலோ அல்லது திருச்சியிலோ தங்கியிருக்கும்படி நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதுவரை சிலை கடத்தல் வழக்கில் கைதான அனைவருக்கும் கும்பகோணத்தில் தங்கியிருந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர். எனவே சென்னை, திருச்சியில் தங்கியிருக்கும்படி நிபந்தனை ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிகாரி திருமகளுக்கு நிபந்தனைஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் உள்ள சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் காலையில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி அறிவித்தார். #KapaleeshwararTemple
    சின்னசேலம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் தாலுகா வி.அலம்பளம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 42). இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் 30 சென்ட் நிலம் உள்ளது.

    இந்த நிலத்திற்குரிய சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய சின்னசேலம் தாலுகா அலுவலகத்துக்கு சுமதி சென்றார். அங்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஸ்வரி (39) என்பவரிடம் இதுபற்றி கூறினார்.

    அப்போது அவர் சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று சுமதியிடம் கேட்டார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுமதி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை சுமதியிடம் கொடுத்து அதை உமாமகேஸ்வரியிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று மாலை சுமதி எடுத்துக்கொண்டு சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பெண் அதிகாரி உமாமகேஸ்வரியிடம் கொடுத்தார்.

    அவர் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று உமாமகேஸ்வரியை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    ×