search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி கல்வித்துறை கட்டிடங்களை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X
    பள்ளி கல்வித்துறை கட்டிடங்களை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்

    ரூ.169.11 கோடி மதிப்பில் பள்ளி கல்வித்துறை கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி, மாவட்ட கனிமவள நிதி மற்றும் ஆசிரியர் நலத்திட்ட நிதி ஆகியவற்றின் மூலமாக 169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 அரசு பள்ளிக் கட்டிடங்கள், கிளை நூலகக் கட்டிடம் மற்றும் ஆசிரியர் இல்லத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    நபார்டு திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக் குறிச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 65 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 114 கோடியே 88 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 45 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 9 உண்டு உறைவிடப் பள்ளிகளில் 49 கோடியே 24 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து சிவகங்கை மாவட்டம், செம்பனூர், மெய்யம்மை காசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கொண்ட கட்டிடம், மாவட்ட கனிமவள நிதியில் இருந்து திருப்பூர் மாவட்டம், புக்கலம், அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்

    காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கத்தில் 63 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகம், மதுரை மாவட்டம் அவனியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் நலநிதியில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை ஆசிரியர் இல்லக் கட்டிடம் என மொத்தம் 169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    திறந்து வைத்தார்.

    2021-22-ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் திட்டச் செயல்பாடுகளைச் சிறப்பாகவும், புதுமையாகவும் செயல்படுத்தும் கற்போர் மையங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒரு மாவட்டத்திற்கு தலா 3 மையங்கள் வீதம் 38 மாவட்டங்களில் 114 மையங்களைத் தெரிவு செய்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கு இணங்க, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் குப்புசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×