search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kapaleeshwarar Temple"

    கபாலீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாயமான சம்பவம் தொடர்பாக கைதான அறநிலையத்துறை பெண் அதிகாரிக்கு நிபந்தனைஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #KapaleeshwararTemple
    கும்பகோணம்:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் நடைபெற்றன. அப்போது புன்னை வனநாதர் சிலை, ராகு, கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாக கூறி அந்த சிலைகள் மாற்றப்பட்டன. பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய சிலைகள் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் சிலைகள் மாற்றப்பட்டதற்கு அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவோடு இரவாக 3 சிலைகளும் மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாற்றப்படும் சிலைகளை ஆகமவிதிப்படி பூஜைகள் செய்து மண்ணில் புதைத்து இருக்க வேண்டும் என்றும் ஆனால் 3 சிலைகளும் அதிகாரிகள் துணையுடன் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் கோவில் சிலைகள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. மேலும் சிலைகள் மாயமானது பற்றி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. குமார் தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு நடத்தினர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிலைகள் மாயமான சம்பவம் பற்றி 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இதையடுத்து சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கடந்த அக்டோபர் மாதம் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தனர். புன்னை வனநாதர் சிலை, ராகு-கேது சிலைகள் இருந்த இடத்திலும் ஆய்வு நடத்தினர்.

    சிலைகள் மாயமான 2004-ம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரியாக திருமகள் என்பவர் இருந்தார். அவர் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருக்கிறார். பெரம்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த அக்டோபர் மாதம் திருமகளிடம் அவரது வீட்டில் வைத்து சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

    இந்த நிலையில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கும்பகோணம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள நீதிமன்ற நடுவர் ஐயப்பன் பிள்ளை முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது இரவு நீண்ட நேரமாகி விட்டதால் நாளை (இன்று) கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும், அதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் திருமகளின் வக்கீல் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். அது தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

    முன்னதாக கைதான திருமகளை மருத்துவ பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பில் இருந்த திருமகள், இன்று காலை 10 மணியளவில் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து திருமகள் நீதிபதி அய்யப்பன்பிள்ளை முன்பு ஆஜர்படுத்தினர். பிறகு திருமகள் சார்பில் அவரது வக்கீல் குப்புசாமி, திருமகளுக்கு ஜாமீன் கேட்டு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அப்போது அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது வக்கீல் குப்புசாமி, திருமகளுக்கு 85 வயதான தாயும், 12 வயதில் மகளும் உள்ளனர். இதனால் சென்னையிலோ அல்லது திருச்சியிலோ தங்கியிருக்கும்படி நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதுவரை சிலை கடத்தல் வழக்கில் கைதான அனைவருக்கும் கும்பகோணத்தில் தங்கியிருந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர். எனவே சென்னை, திருச்சியில் தங்கியிருக்கும்படி நிபந்தனை ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிகாரி திருமகளுக்கு நிபந்தனைஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் உள்ள சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் காலையில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி அறிவித்தார். #KapaleeshwararTemple
    சென்னை கபாலீசுவரர் கோவிலில் மரகத மயில் சிலை கையாடல் செய்யப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது செய்யப்பட்டார். #KapaleeshwararTemple
    சென்னை:

    தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அவர் ஓய்வுபெற்ற நிலையில் மேலும் 1 ஆண்டுக்கு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது. இந்தநிலையில் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள பொன் மாணிக்கவேல் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் தங்க சிலையை போலியாக செய்த வழக்கில் இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

    இந்தநிலையில், மற்றொரு பெண் அதிகாரியான இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளும் (வயது 53) நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை கபாலீசுவரர் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரகத மயில் சிலை மற்றும் ராகு, கேது சிலைகள் கையாடல் செய்யப்பட்டதாக திருமகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு கபாலீசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கபாலீசுவரர் கோவில் வளாகத்தில் புன்னைவனநாதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மிகவும் அரிதான மரகதத்தால் செய்யப்பட்ட மயில் சிலை ஒன்று இருந்தது.

    பார்வதிதேவி மயில் வடிவில் வந்து ஈஸ்வரனுக்கு மலர்களால் பூஜை செய்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில் அந்த மரகத மயில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. மயில் சிலையின் வாயில் மலர்கள் இருப்பது போன்று அந்த பழமையான சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

    அந்த சிலை சேதமடைந்துவிட்டதாக கூறி, கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, புதிதாக செய்யப்பட்ட மயில் சிலை அங்கு வைக்கப்பட்டது. பழமையான மரகத மயில் சிலை அகற்றப்பட்டது. அந்த சிலையோடு சேர்த்து ராகு, கேது சிலைகளும் சேதமடைந்ததாக கூறி அகற்றப்பட்டன. ராகு, கேது சிலைகளும் புதிதாக வைக்கப்பட்டன.

    பழமையான மரகத மயில் சிலையின் வாயில் மலர்கள் இருப்பதுபோன்ற தோற்றம் காணப்பட்டது. ஆனால் புதிதாக வைக்கப்பட்ட மயில் சிலை வாயில் மலர்களுக்கு பதில் பாம்பு இருப்பது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டது.

    இவ்வாறு புதிய சிலைகள் வைக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னை கபாலீசுவரர் கோவிலுக்கு 2 முறை சென்று விசாரணை நடத்தினார்.

    2004-ம் ஆண்டு கபாலீசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, தற்போதைய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் நிர்வாக அதிகாரியாக இருந்தார். திருமகளிடமும் விசாரணை நடைபெற்றது.

    ராகு, கேது சிலைகளை மாற்றுவதற்கு சிபாரிசு செய்த முத்தையா ஸ்தபதியிடமும் விசாரணை நடந்தது. 2004-ம் ஆண்டு அப்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருந்த தனபாலிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணைக்கு பிறகு திருமகள், முத்தையா ஸ்தபதி, தனபால் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது திருமகள் பல்வேறு தவறான தகவல்களை போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

    புன்னைவனநாதருக்கு திருப்பணியே நடைபெறவில்லை என்று திருமகள் கூறியதாக தெரிகிறது. மேலும் புன்னைவனநாதர் சன்னதியையே நான் பார்க்கவில்லை என்றும், சிலை மாற்றப்பட்டதற்கும், தனக்கும் தொடர்பு இல்லையென்றும் போலீஸ் விசாரணையில் திருமகள் கூறினாராம்.

    ஆனால் புன்னைவனநாதர் சன்னதியிலும் திருப்பணிகள் நடந்ததற்கான வீடியோ ஆதாரத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீடியோ காட்சியில் புன்னைவனநாதருக்கு நடந்த திருப்பணியில் அதிகாரி திருமகள் கலந்துகொண்டது கண்டறியப்பட்டது.

    மேலும் திருப்பணிகள் நடந்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவற்றை அழித்துவிட்டதாகவும் திருமகள் பதில் அளித்தார். மாற்றப்பட்ட பழமையான மரகத மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் எங்கே போனது? என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அந்த சிலைகளை பூமிக்குள் புதைத்துவிட்டதாக கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள். ஆனால் அதிலும் உண்மை இல்லை என்று சந்தேகம் உள்ளது.

    மாற்றப்பட்ட மரகத மயில் சிலைகள் உள்ளிட்ட 3 சிலைகளும் வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. அதுபற்றி விரிவான விசாரணை நடக்கிறது.

    இந்தநிலையில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைத்த குற்றத்திற்காகவும் அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளை நேற்று அதிகாலையில் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட திருமகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி, தனபால் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர்.

    மயில் சிலையை மாற்ற சிபாரிசு செய்த கேரள ஜோதிடர் ஒருவரையும் இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். #KapaleeshwararTemple

    ×