மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி சொத்துக்கள் மீட்பு

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் மற்றும் காலிமனை சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
Published on

சென்னை :

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 300 சதுரடி பரப்பளவுள்ள கட்டிடம் மற்றும் காலி மனை கபாலிநகர், வெங்கடேஸ்வரா அக்ரஹாரத்தில் உள்ளது. இந்த கட்டிடம் மற்றும் காலி மனை டாக்டர் ராமாதேவி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நியாயமான வாடகை மற்றும் நிலுவை தொகையினை கட்ட அவர் தவறியதால் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த கட்டிடத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றிவிட்டு, அந்த நிலத்தை கோவில் வசம் கொண்டுவந்தனர். மீட்கப்பட்ட அந்த கட்டிடம் மற்றும் காலிமனை ஆகிய சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியாகும். அப்போது மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் மற்றும் செயல் அலுவலர் த.காவேரி மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com