search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condition bail"

    கபாலீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாயமான சம்பவம் தொடர்பாக கைதான அறநிலையத்துறை பெண் அதிகாரிக்கு நிபந்தனைஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #KapaleeshwararTemple
    கும்பகோணம்:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் நடைபெற்றன. அப்போது புன்னை வனநாதர் சிலை, ராகு, கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாக கூறி அந்த சிலைகள் மாற்றப்பட்டன. பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய சிலைகள் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் சிலைகள் மாற்றப்பட்டதற்கு அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவோடு இரவாக 3 சிலைகளும் மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாற்றப்படும் சிலைகளை ஆகமவிதிப்படி பூஜைகள் செய்து மண்ணில் புதைத்து இருக்க வேண்டும் என்றும் ஆனால் 3 சிலைகளும் அதிகாரிகள் துணையுடன் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் கோவில் சிலைகள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. மேலும் சிலைகள் மாயமானது பற்றி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. குமார் தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு நடத்தினர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிலைகள் மாயமான சம்பவம் பற்றி 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இதையடுத்து சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கடந்த அக்டோபர் மாதம் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தனர். புன்னை வனநாதர் சிலை, ராகு-கேது சிலைகள் இருந்த இடத்திலும் ஆய்வு நடத்தினர்.

    சிலைகள் மாயமான 2004-ம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரியாக திருமகள் என்பவர் இருந்தார். அவர் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருக்கிறார். பெரம்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த அக்டோபர் மாதம் திருமகளிடம் அவரது வீட்டில் வைத்து சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

    இந்த நிலையில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கும்பகோணம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள நீதிமன்ற நடுவர் ஐயப்பன் பிள்ளை முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது இரவு நீண்ட நேரமாகி விட்டதால் நாளை (இன்று) கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும், அதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் திருமகளின் வக்கீல் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். அது தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

    முன்னதாக கைதான திருமகளை மருத்துவ பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பில் இருந்த திருமகள், இன்று காலை 10 மணியளவில் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து திருமகள் நீதிபதி அய்யப்பன்பிள்ளை முன்பு ஆஜர்படுத்தினர். பிறகு திருமகள் சார்பில் அவரது வக்கீல் குப்புசாமி, திருமகளுக்கு ஜாமீன் கேட்டு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அப்போது அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது வக்கீல் குப்புசாமி, திருமகளுக்கு 85 வயதான தாயும், 12 வயதில் மகளும் உள்ளனர். இதனால் சென்னையிலோ அல்லது திருச்சியிலோ தங்கியிருக்கும்படி நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதுவரை சிலை கடத்தல் வழக்கில் கைதான அனைவருக்கும் கும்பகோணத்தில் தங்கியிருந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர். எனவே சென்னை, திருச்சியில் தங்கியிருக்கும்படி நிபந்தனை ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிகாரி திருமகளுக்கு நிபந்தனைஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் உள்ள சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் காலையில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி அறிவித்தார். #KapaleeshwararTemple
    ×