search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.எல்.ஏ. பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி- கடிதத்தில் பரபரப்பு புகார்
    X

    எம்.எல்.ஏ. பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி- கடிதத்தில் பரபரப்பு புகார்

    • பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மஞ்சரியாலா பெல்லம் பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்க்கம் சின்னய்யா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுகுறித்து பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.

    அப்போது துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ அடிக்கடி எனக்கு போன் செய்து நான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும். என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என பேசி வருகிறார் .

    மேலும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் எனது வீட்டிற்கு நேரில் வந்து தொல்லை கொடுத்தனர்.

    நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என புகாரில் கூறியிருந்தார்.

    மேலும் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    அவரிடம் முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது எம்.எல்..ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக போராட்டத்தை கைவிடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

    அதனை ஏற்று சேஜல் போராட்டத்தை கைவிட்டார். மீண்டும் அவர் ஐதராபாத்திற்கு வந்து பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து எம்.எல்.ஏ. அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் அதிகாரி சேஜல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று ஐதராபாத் ஜூப்ளிகில்சில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பெண் அதிகாரி சேஜல் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் பெண் அதிகாரி சேஜல் அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர் அதில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில் துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ.வின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது ஆட்கள் என்னை கொலை செய்ய பார்க்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை கொலை செய்து விடுவார்கள். அவர்களிடமிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என எழுதியுள்ளார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×