உள்ளூர் செய்திகள்
காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு-ஆர்ப்பாட்டம்
காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அண்ணா சிலை அருகில் சாமானிய மக்கள் நலக் கட்சி மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரிகள் அமைப்பது என்பது, டெல்டாவை பாலைவனமாக்கி டெல்டா மாவட்டத்தில் உள்ள 300 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மீத்தேன், ஷேல் மீத்தேன் உட்பட ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான, பன்னாட்டு நிறுவனங்களுக்கு டெல்டாவை தாரை வார்ப்பதற்கான சதியின் ஒரு அங்கமாகவே பார்க்க வேண்டும்.
இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசின் துணையுடன், கர்நாடக பா.ஜ.க. அரசு பெங்களூருக்கு குடிநீர் தேவை என்ற பொய்யான ஒரு காரணத்தை முன்வைத்து மேகதாதுவில் அணை கட்டுவது கூட டெல்டாவை பாலைவனமாக்குவதற்கான சதியின் ஒரு அங்கம்தான்.
காவிரியில் புதிய ஆற்று மணல் குவாரிக்கு அனுமதி கொடுப்பது என்பது, 26 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்தையும், 15 மாவட்ட மக்களின் விவசாய ஆதாரத்தை அழிக்கின்ற அபாயகரமான நடவடிக்கையாகும். எனவே தமிழக அரசு இதை மேற்கொள்ளக் கூடாது என்று பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் சாமானிய மக்கள் நல கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.