உள்ளூர் செய்திகள்
பப்ஜி மதன்

வங்கிக்கணக்கு முடக்கத்தை எதிர்த்து ‘பப்ஜி' மதனின் மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published On 2022-03-19 03:22 GMT   |   Update On 2022-03-19 03:22 GMT
வங்கிக்கணக்கு முடக்கத்தை எதிர்த்து ‘பப்ஜி' மதனின் மனைவி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை:

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி விளையாடி, அதை யூ-டியூபில் பதிவேற்றம் செய்ததாக பப்ஜி மதன் என்பவரை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, அவர் கொரோனா நிவாரண நிதிக்காக பலரிடம் பெரும் தொகை வசூலித்து இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, பப்ஜி மதன், அவரது மனைவி கிருத்திகா ஆகியோரது வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கம் செய்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கிருத்திகா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் உள்ளதாகவும், இது யாருக்கு சொந்தமானது என்பது சாட்சி விசாரணைக்கு பின் தான் தெரியவரும் என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கிருத்திகா தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், மனுதாரர் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி நிவாரணம் பெறலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News