உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் தற்கொலை செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த கமல்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனைவி, மகள்கள் வெண்ணிலா, சரோஜினி ஆகியோரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
திருப்பூர்:
திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 55). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் செலவுக்காக அக்கம்பக்கத்தினரிடம் ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கியிருந்தார். தேர்தலில் அவர் 44 ஓட்டுகள் மட்டுமே வாங்கியிருந்தார். இதனால் மனமுடைந்த மணி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை மணியின் மனைவி சுப்பாத்தாள், மகள்கள் வெண்ணிலா, சரோஜினி ஆகியோரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர்களிடம், மணியை போன்ற ஆட்கள் கிடைப்பது கஷ்டம். அவரை போன்று எல்லா நடிகர்களுக்கும் ஆட்கள் கிடைக்காது என்று கூறிய கமல்ஹாசன், எந்த உதவிகள் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். செய்து தருகிறேன் என்றார். அப்போது திருப்பூர் மாநகர மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.