உள்ளூர் செய்திகள்
.

எடப்பாடி அருகே ஏரியில் மிதந்த ஆண் பிணம்

Published On 2022-02-18 10:47 GMT   |   Update On 2022-02-18 10:47 GMT
எடப்பாடி அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது.
எடப்பாடி:

சேலம் மாவட்டம்  எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளாளபுரம் கிராமத்தில் உள்ள செங்காட்டானூர் ஏரியில் இன்று காலை ஆண் பிணம் ஒன்று மிதந்தது.

இதை கண்ட பொது மக்கள் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அங்கு உள்ள ஏரியில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அவர் ஏரியில் குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் சமயத்தில் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள ஏரியில்  ஆண் ஒருவர் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News