உள்ளூர் செய்திகள்
திருமணம் நிச்சயமான வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் தவறிவிழுந்து பலி
திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் தவறி கீழே விழுந்து பலியானார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்குகரம்பை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகள் பானுமதி (வயது 22).
இவருக்கும் ஆழ்வார் குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்த சுடலை மணி (23). என்ப வருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பானுமதிக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற பானுமதி நெல்லை வந்தார்.
நெல்லை ஆஸ்பத்திரிக்கு அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளை சுடலைமணியும் வந்திருந்தார். சிகிச்சை முடிந்து சுடலை மணி யின் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அமர்ந்து பானுமதி வீட்டிற்கு சென்றார்.
சுத்தமல்லியை கடந்து மோட்டார் சைக்கிள் சென்ற போது, பின்பகுதியில் அமர்ந்திருந்த பானுமதிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு பானுமதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.