உள்ளூர் செய்திகள்
காய்ச்சல் பரிசோதனை

சென்னையில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை தொடக்கம்

Published On 2022-01-05 04:37 GMT   |   Update On 2022-01-05 04:37 GMT
சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இது 1,489 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் இருமடங்காக தொற்றுபரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. 22 இடங்களில் முதல்கட்ட உடற்பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு மருத்துவ குழுவினர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதேபோல அவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வ ஊழியர்களும் 1000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் அவர்களுக்கு மருந்துகள், உணவு உள்ளிட்ட உதவிகள் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொற்று வேகமாக பரவி வருவதால் அதிகமாக பாதிப்புள்ள பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனையையும் இன்று முதல் தொடங்கியுள்ளனர். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்று வீடு வீடாக கேட்டு வருகிறார்கள்.

மேலும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கக்கூடியவர்களின் பெயர் விவரங்களையும் கேட்டு பெறுகிறார்கள். கொரோனா அறிகுறி உள்ளவர்களை அருகில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் இந்த பகுதியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாகவும் அறிவிக்கப்படுகிறது.

சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அதில் 1,650 தெருக்களில் தற்போது தொற்று பரவி உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் தொற்று பரவல் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு காய்ச்சல் பரிசோதனை மூலம் உடனடியாக தொற்று பாதிப்பை கண்டறிய முடிந்தது. ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதனால் தொற்று பரவுவது தடுக்கப்பட்டது. அதேபோன்று தற்போது காய்ச்சல் முகாம்கள் செயல்படத் தொடங்கி உள்ளன.


Tags:    

Similar News